யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். பாசையூருக்கு இன்று (25) அமைச்சர் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டார்.
இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாசையூர் மீன் சந்தைக்கு சென்று அதனை பார்வையிட்டதன் பின்னர், இறங்குதுறைக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அத்துடன், பாசையூர் கடற்றொழில் சங்கத்தினருடனும் கலந்துரையாடினார்.
அவ்வேளை, கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களால் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவ்வேளை உறுதியளித்தார்.
அதன் பின்னர், பாசையூரில் உள்ள சென். அன்தனிஸ் மைதானத்துக்கும் அமைச்சர் சென்றிருந்தார். அங்கும் மைதானத்தை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினார்.







