கத்தியால் குத்திவிட்டு மோட்டார் சைக்கிளை எரித்ததாக கூறி இருவர் பொலிஸில் சரண்!

87 0
நபரொருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) மாலை சரணமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கொட்டகலை பகுதியைச் சேர்ந்த நபர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் அடிப்படையில்  மேலும் தெரியவருவதாவது:

காயமடைந்த நபர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டார். எனினும், கொட்டகலை பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவை பேணி வந்துள்ளார்.

இந்நிலையில், கணவரின் செயலை எதிர்த்த மனைவியை அந்த நபர் தாக்கியுள்ளார்.

கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட சண்டையை விசாரிப்பதற்காக தாக்குதலுக்கு இலக்கான பெண், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் நேற்று திம்புள்ள, பத்தன பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அவ்வேளை, விசாரணையின்போது பொலிஸார் முன்னிலையில், தனது மனைவியுடன் சமரசமாவதாக அந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர், வெளியே சென்ற நபர், தான் தகாத உறவு கொண்டிருந்த பெண்ணுடன் சேர்ந்து கொட்டகலை பகுதியில் நின்று செல்பி எடுத்துள்ளார்.

அதைக் கண்ட மனைவியினது சகோதரன், அந்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். மாமனாரால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கொளுத்தியுள்ளார்.

அதன் பின்னர், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.