மோடி வருகை எமக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என்கிறார் வெளிவிவகார பிரதி அமைச்சர்

94 0

மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வந்துள்ளோம்.  இந்த வெற்றியின்  முதற்படியாக எமது நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதை முக்கியமான விடையமாக பார்க்கின்றோம். அவரின் வருகையின் பின்னர் ஏனைய நாட்டு தலைவர்களும் வர இருக்கின்றனர் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்  சனிக்கிழமை (29) பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.  எது எவ்வாறாக இருந்தாலும் தேர்தல் விதிமுறை அமுலில் இருப்பதால் சில அபிவிருத்தி தொடர்பான விடையங்களை பற்றி தீர்மானம் எடுத்தோம். அதேவேளை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளதுடன்  கடந்த  பாராளுமன்ற தேர்தலைவிட உள்ளூராட்சி சபையில் மட்டக்களப்பில்  பாரிய வெற்றியை பெறுவோம்.

கனியவளத்தை (மண் அகழ்வு)  பார்த்தால் கடந்த காலத்தில் அரசியல் ரீதியான தாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே நான்  மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக வந்தவுடன் சில இடங்களில் சட்டவிரோத அகழ்வுகளை நிறுத்தினேன்.

இருந்த போதும் சில இடங்களில் முறைகேடுகள் இடம்பெறுகின்றதாக முறைப்பாடுகள் வந்துள்ளது ஆகவே கடந்த 76 வருடங்கள் ஒரு சீர்குலைவுக்கு உட்படுத்தப்பட்ட நாட்டைதான் நாங்கள் பெறுப்பெடுத்துள்ளோம்.

எனவே சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக குரல்கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். இதில் மகாவலி, நீர்பானம் விவசாயம், வனபரிபாலனம், கனியவளம், சுற்றுச்சூழல் போன்ற திணைக்களங்களை ஒன்றுபடுத்தி ஒரு வெளிப்படை தன்மையிலான மண் கொள்கை ஒன்றை வகுத்து பெருத்தமான இடங்களை அடையாளம் கண்டு அதில் சரியானவர்களுக்கு அழ்வதற்கு அனுமதி வழங்க துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்திய இராஜதந்திர ரீதியாக மிக நெருக்கமான நாடு, மிகவும் அண்மையில் இருக்கின்ற நாடு தேசிய மக்கள் சக்தி தொடர்பாகவும் ஜனாதிபதி தொடர்பாகவும் எதிர்தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பிரபலமான விமர்சனம் தான் சர்வதேச ரீதியாக எந்தவிதமான கொடுக்கல் வாங்களையும் செய்யமுடியாது. இந்தியா பகைக்கும் அமெரிக்கா, ஜப்பான்  போன்ற நாடுகளின் உதவிகள் கிடைக்காது என அடிப்படை இல்லாத விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இன்று மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக மிகவும் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வந்துள்ளோம்  இந்த வெற்றியின் பின்னர் எமது நாட்டிற்கு முதலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதை முக்கியமான விடையமாக பார்க்கின்றோம்.

அதேவேளை இந்தியாவுடன் சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் செய்யவுள்ளோம். அதுமட்டுமல்ல இந்திய அரசின் பாரிய உதவி மூலம் கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.