வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதனாலேயே போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் இரணைத்தீவு மக்கள்

238 0
இரணைத்தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள் ஆனால் அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
இரணைத்தீவு எமது பூர்வீக நிலம் எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்குங்கள் எனக் கோரி மே ஒன்று முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்லும் வரை போராடப் போவதாகவும், கடந்த காலம் போன்று அரசியல் வாதிகளை நம்பத் தயார் இல்லை என்றும், எங்களிடம் வந்து இந்தா செய்கின்றோம் அந்தா செய்கின்றோம் இரண்டு வாரத்தில் சென்றுவிடலாம் என்றெல்லாம் வாக்குறுதிகளை கூறிவிட்டு சென்றுவிடுவார்களே தவிர அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நாம் சொந்த நிலத்திற்கு செல்லும் உழைக்கின்றவர்களாக தெரியவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
1992 ஆம் ஆண்டு இரணைத்தீவை விட்டு வெளியேற்றப்பட்ட தாங்கள் இன்று வரை இரணைமாதாநகர் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.சுமார் 340 வரையான குடும்பங்கள் இருப்பதாகவும் 2009 இற்கு பின்னர் தொடர்ச்சியாக சொந்த நிலத்திற்கு செல்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதுசாத்தியமாகவில்லை. எனவும் தெரிவித்துள்ளனர்.