மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்திலுள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானையொன்று புதன்கிழமை (19) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானை 18 வயதுடையது என தெரிய வந்துள்ளது.
சம்பவ தினத்தன்று அப்பகுதிக்குச் சென்றவர்கள் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை அவதானித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார், மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் ஆகியோர் குறித்த வயல் பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.
நீண்ட காலமாக குறித்த பகுதியில் குறித்த யானை தொடர்ச்சியாக நெற்பயிரை சேதப்படுத்தி வந்ததாகவும் தெரிய வருகிறது.
உயிரிழந்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த விவசாய காணியின் உரிமையாளர் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



