மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் இருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

58 0
மியன்மாரில் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் மோசடி  முகாம்களில் இருந்து 14  இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒத்துழைப்பு மற்றும்  மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இவர்களை மீட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18)  நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர்களை மீட்பது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மியான்மார் துணைப் பிரதமர் உ தான் ஸ்வேவுடன் கடந்த பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி தொலைபேசியில் உரையாடினார்.

அத்தோடு, பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் சாங்கியம்பொங்சாவுடனும் தொலைபேசியில் உரையாடினார்.

மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் மோசடி முகாம்களில்  சிக்கியுள்ள இலங்கை பிரஜைகளை விரைவாக மீட்டு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியான்மார் அரசாங்கத்தின் அவசர உதவியை அமைச்சர் இதன்போது கோரினார்.

இந்நிலையில்,  14 இலங்கையர்களும் மீட்கப்பட்டமைக்கு மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின்  விலைமதிப்பற்ற உதவிகளுக்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச விமானப் பாதை மற்றும் உள் போக்குவரத்தை வழங்குவதற்காக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் மியான்மரில் உள்ள பிற சர்வதேச அரசு சாரா நிறுவனங்களுக்கு இந்தச் செயல்பாட்டின் போது வழங்கப்பட்ட நலன்புரி உதவிகளுக்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.