மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்ற சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

29 0

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக  நேற்று புதன்கிழமை (12) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த போது விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டுவான, அகுலந்தெனிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய படலகே பசிந்து சஞ்சன என்ற இளைஞன் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோர் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகனும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனளர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச ்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்,  இந்த துப்பாக்கிச ்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் துபாய்க்குப் புறப்படவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-653 விமானத்தில் பயணிப்பதற்காக நேற்றையதினம் இரவு 08.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடர்பில் மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.