கொழும்பில் உள்ள பிரபல தேசிய பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளில் வகுப்புகள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. இது, பல்லின மக்கள் வாழும் இங்கு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த இருக்கும் வாய்ப்பை இல்லாமலாக்கும் செயலாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கொழும்பில் இருக்கும் பிரதான கல்லூரிகளான ரோயல், இசிபதன மற்றும் டி,எஸ். ஆகிய மூன்று கல்லூரிகளிலும் தமிழ் பிரிவு இருந்து வருகிறது. ஆனால் படிப்படியாக இந்த வளம்மிக்க தேசிய பாடசாலைகளில் தமிழ் பிரிவு வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்ப பிரிவில் சிங்கள மொழி மூல 8 வகுப்புகள் இருக்கும் நிலையில் தமிழ்மொழி மூலம் 2 வகுப்புகளே இருக்கின்றன. அதே பாடசாலையில் கனிஷ்ட பிரிவில் தரம் 6 தொடக்கம் 11 வரையில் சிங்கள மொழி மூலம் 7 வகுப்புகள், தமிழ் மொழி மூலம் 2 வகுப்புகள் ஆங்கில மொழி மூலம் 6 வகுப்புகள் இருக்கின்றன.
ரோயல் கல்லூரியின் உயர்தர கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் சிங்கள மொழி மூலம் 14 வகுப்புகள், தமிழ்மொழி மூலம் 2 வகுப்புகள், ஆங்கில மொழி மூலம் 2 வகுப்புகள், உயர்தர வர்த்தக பிரிவில் சிங்கள மொழி மூலம் 5 வகுப்புகள், தமிழ்மொழி மூலம் 1 வகுப்பு, ஆங்கில மொழி மூலம் 1 வகுப்பு இருக்கின்றன.
டி,எஸ். சேனாநாயக்க கல்லூரியில் ஆரம்ப பிரிவில் சிங்கள மொழி மூலம் 6 வகுப்புகள், தமிழ் பிரிவில் 1 வகுப்பு, கனிஷ்ட பிரிவில் 6 தொடக்கம் 11ஆம் வகுப்பு வரை சிங்கள மொழி மூலம் 7 வகுப்புகள், தமிழ் மொழி மூலம் 2 வகுப்புகள், ஆங்கில மொழி 2 வகுப்புகள் இருக்கின்றன.
இந்த பாடசாலையின் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவில் சிங்கள மொழி 4 வகுப்புகள், தமிழ் மொழி 1 வகுப்பு, ஆங்கில மொழி 2 வகுப்புகள். உயர்தர வர்த்தக பிரிவில் சிங்கள மொழி 4 வகுப்புகள், தமிழ் மொழி 1 வகுப்பு, ஆங்கில மொழி 2 வகுப்புகள் இருக்கின்றன.
இசிபத்தன கல்லூரியில் ஆரம்ப பிரிவில் சிங்கள மொழி மூல 6 வகுப்புகள், தமிழ் பிரிவில் 1 வகுப்பு, கனிஷ்ட பிரிவில் 6 தொடக்கம் 11ஆம் வகுப்பு வரை சிங்கள மொழி மூலம் 6 வகுப்புகள் தமிழ் மொழி 1 வகுப்பு, ஆங்கில மொழி 1 வகுப்பு. இந்த பாடசாலையின் உயர்தர பிரிவில் சிங்கள மொழி 6 வகுப்புகள் தமிழ் மொழி 1 வகுப்பு என்றவாறே காணப்படுகின்றன. இது மிகவும் பாரபட்சமான நிலைப்பாடாகும்.
ஏனெனில் சிங்கள, தமிழ் முஸ்லிம்கள் என பல இனங்கள் ஒன்றாக வாழ்கின்ற இடங்களில்தான் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். பல்லின மக்கள் வாழும் இந்த பிரதேசங்களில் நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் என அமைத்துவிட்டு, சிறு வயதிலேயே மாணவர்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரித்து வைத்து, அவர்கள் 18 வயதான பின்னர் நீங்கள் அனைவரும் இலங்கையா்களாக ஒன்றாக எழுந்து நிற்க வேண்டும் என தெரிவித்தால், அது சாத்தியமாகப் போவதில்லை. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமான ஒரு மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது.
அதனால் சிறந்த வளங்கள் காணப்படும் ரோயல், இசிபத்தன, டி.எஸ் ஆகிய கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்புகளை அதிகரிக்க வேண்டும். ஆனால் சில அதிகாரிகள் ஒன்றுபட்டு இந்த கல்லூரிகளில் தமிழ் வகுப்புகளை திட்டமிட்டு குறைக்கிறார்கள். அது மாத்திரமின்றி ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் இடமிருக்கின்றபோதும் மாணவர்களை அந்த வகுப்புகளில் சேர்ப்பதில்லை. இந்த சம்பவம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. நாங்கள் ஆட்சி செய்துவந்த காலத்திலும் இருந்து வந்தது. அப்போது இது தொடர்பாக அன்றைய கல்வி அமைச்சருடன் நான் சண்டையிட்டிருக்கிறேன். அதனால் இந்த விடயங்களை போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனால் இந்த அரசாங்கம் அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒரு கூரையின் கீழ் படிக்க முடியுமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதனை முதலில் பிரபல பாடசாலைகளில் ஆரம்பியுங்கள். கொழும்பில் அதனை செய்ய முடியும்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள மகா வித்தியாலயம் இருக்கிறது. எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்னவென்றால், சிங்கள மகா வித்தியாலயம் என ஒன்று அங்கு தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் இருக்கும் பிரபல யாழ். இந்து கல்லூரி, மத்திய கல்லூரி இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் சிங்கள பிரிவை ஆரம்பித்துவைத்து இந்த மகா வித்தியாலயத்தை அதனுடன் இணைத்துவிடுங்கள். அப்போது ஒரே கூரையின் கீழ் தமிழ் சிங்கள மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் ஏற்படும்.
அதேபோன்று மலையகத்தில் நுவரெலியாவை தவிர மற்ற இடங்களில் விஞ்ஞானப் பிரிவு இல்லை. மலையகத்தில் பாடசாலைக்கு அண்மித்து இருக்கும் 2 பேர்ச் காணியை பாடசாலைக்கு பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் நாங்கள் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டிருக்கிறோம். அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மலையக மக்களுக்கு 2003ஆம் ஆண்டிலே முழுமையான குடியுரிமை கிடைத்தது. அதனால் அரசியல், பொருளாதார, கல்வி, கலாசாரம் என அனைத்திலும் பின்தங்கி இருக்கிறோம். அதனால் நாங்கள் யாரும் யாரையும் குறைகூறி பயனில்லை என்றார்.