விருப்பு வாக்குகளை மீள எண்ணக் கோரும்; ராஜித்தவின் மனுவினை பரிசீலிக்க திகதி குறிப்பு

82 0

 நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணி, புதிய முடிவுகளை வெளியிட உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (6) தீர்மானித்தது.

இது குறித்த மனு நேற்று ஆராயப்பட்ட போது எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்  நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்த மனு வியாழக்கிழமை (06) உயர் நீதிமன்ற நீதியரசர்  ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான‌, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் ஆராயப்பட்டது.

மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர், உறுப்பினர்கள், களுத்துறை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை (06) இம்மனு ஆராயப்பட்ட போது, மனுதாரரான ராஜித்த சேனாரத்ன சார்பில், சட்டத்தரணி கீர்த்தி திலகரத்னவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜரானார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில் விருப்பு வாக்குகளை எண்ணுவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக  தனக்கு பாராளுமன்றத்திற்குத் செல்ல‌ முடியாமல் போனதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான விருப்பு வாக்குகளில் உள்ள வித்தியாசம் 119 வாக்குகள் மட்டுமே என்றும், வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியில் களுத்துறை மாவட்டத்திற்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணி புதிய முடிவுகளை வெளியிடுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை இம்மனு ஊடாக கோரியுள்ளார்.