மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா ?

78 0

மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளதன் மூலம் எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தேர்தல் காலத்தில் அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்து வந்தது, 9000 ரூபா மின்சார கட்டணத்தை 6000 ரூபா ஆகவும், 3000 ரூபா மின்சார கட்டணத்தை 2000ரூபா ஆக அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு வீதம் குறைப்போம் என்பதாகும். ஆனால் மக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் பிரகாரம், மின்சார கட்டணம் சராசரியாக 20வீதம் குறைக்கப்பட்டது.

இது இவ்வாறு இருக்கையில் விரைவில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்கட்டண சூத்திரத்தை மக்கள் சார்பானதாக மாற்றியமைப்போம் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிப்பை விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.

இவ்வாறு மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும் போது இது புதிய முதலீடுகளுக்கும் பொதுமக்களும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

இதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளிக்கையில், எதிர்வரும் தினங்களில் வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் போது, மின்சக்தி அமைச்சு மீதான விவாதத்தில் மின்சார கட்டணம் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என்றார்.