யாழ்ப்பாணம் கைதடி விகாரை, மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்கான, தமிழர்களுக்கான தீர்வுகளை ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடில் இனங்களுக்கிடையே பாரிய முறுகல் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் இன, மத கலவரங்களால் இரத்த ஆறு ஓடும் வாய்ப்புக்கள் உள்ளது என ஈ.பி.டி.பி. கட்சி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதில் அன்ரனிசில் ராஜ்குமார் மேலும் கூறுகையில்,
யாழ். தையிட்டி விகாரைகள் விவகாரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது விகாரைக்கு ஊடகவியலாளர்கள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளிக்காது வீதியில் தடுத்து நிறுத்தினர்.
எனவே இனவாதம், மதவாதம் பேசக்கூடாது. ஊடக சுதந்திரம் வேண்டும் என ஆட்சியை கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை மறுக்கின்றனரா? எங்களுக்கு சந்தேகமாக இருக்கின்றது.
ஜனாதிபதி ஆட்சி பீடம் ஏறும்போது என்ன சொல்லி நாட்டை பொறுப்பெடுத்தார்?
ஊடக சுதந்திரம் தேவை என்றார். ஆனால் தையிட்டி விவகாரத்தில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் முற்றுமுழுதாக தடுக்கப்பட்டுள்ளது என கருதுகின்றோம்.
இந்த விகாரை பிரச்சினை நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இதற்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி தமிழர்களுக்கான இந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அதேவேளை தமிழர்களின் நிலங்களில் சட்டவிரோதமான சிங்கள குடியேற்றங்களை தடுக்கவேண்டும். இந்த சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்காவிட்டால் நிச்சயமாக இனங்களுக்கிடையே பாரிய முறுகல் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் இரத்த ஆறு ஒடும் வாய்ப்புக்கள் உள்ளது.
கடந்த காலத்தில் யுத்தத்தினால் மூன்று இனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு பொருளாதார சுமையினால் தாங்கமுடியாத நாடாக இலங்கை உள்ளதுடன் வாழ்க்கைச் செலவை எடுத்துக்கொண்டால் தேங்காய், அரிசி, உப்பின் விலை அதிகரிப்பை பற்றி சொல்லத் தேவையே இல்லை. அப்படியான நாட்டிலே மீண்டும் இனமுறுகல் ஏற்பட்டு மத, இன கலவரங்கள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
எனவே ஜனாதிபதி தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும்.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு, நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி முழுமையான ஊடக சுதந்திரத்தை இலங்கை தேசத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.