பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதானவராவார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த மாதம் 31 ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது, 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொலிஸார் விசாரணைகளில், சந்தேக நபர் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தெகிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடனும், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடனும், கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது பிரதான சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
மேலும், வெளிநாடுகளிலுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆலோசனைக்கமைய சந்தேக நபர் இந்த குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

