39 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் சிகரட்டுகளுடன் வர்த்தக பெண் கைது

36 0
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 39 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் சிகரட்டுகளுடன் வர்த்தக பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தக பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மலேசியாவிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 02.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளில் இருந்து 12 ஆயிரம் Smoking Shot அடங்கிய  262 இலத்திரனியல் சிகரட்டுகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 07 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.