வட மாகாணத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள வரவு ,செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க உள்ளோம்.அதேபோன்று அதிக சுற்றுலா பயணிகளை வட மாகாணத்துக்கு அழைத்து வருவதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம்.
மக்களுடைய காணி மக்களுக்கே வழங்கப்படும்.மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே எம்மால் முன்னோக்கி செல்ல முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
நாம் இந்த மக்களுக்கு தொழில் வாய்புகளை ஏற்படுத்தி தருகிறோம். அரச திணைக்களங்களில் வெற்றிடங்களை நிரப்ப உள்ளோம்.
2 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம். இதில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு பாரியளவில் காணிப்பிரச்சினை உள்ளது.மக்களுடைய காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் காணிகளை கையகப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது.எனினும் பொய்யாக காணிகளை வைத்திருக்க முடியாது.
எனவே இந்த பிரச்சினைக்கு நிச்சயம் நாம் தீர்வை பெற்றுத் தருவோம். எமது மீனவர்கள் நீண்டகாலமாக கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனவே இந்த பிரச்சினை நிவர்த்திக்க வேண்டும். இந்திய அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சு நடத்தினோம். பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாம் கடற்படைக்கு கட்டளையிட்டுள்ளோம்.
இது இந்த பகுதி மக்களின் கடற்பகுதி.மீன்பிடிப்பதற்கான உரிமை உள்ளது. அந்த உரிமை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.அந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காண்போம்.
வட மாகாணத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள 40 ஆயிரம் ஏக்கர் இருப்பதாக நாம் கண்டறிந்தோம். அதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க உள்ளோம்.
தென்னங்கன்று வழங்குவதற்கும் நிலத்தை பன்படுத்துவதற்கான பசளைக்காக நிதியையும் நாம் வழங்குவோம். இந்த பகுதி மக்கள் விவசாயத்துக்கு பாரியளவில் பங்களிப்பு செய்யக்கூடியவர்கள்.
ஆனால் உரிய விலை இல்லை.உரிய திட்டமும் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் புதிய யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளேன்.
அனைத்து மக்களுக்கும் வெறுப்பட்ட விழகாக்கள் உள்ளன. சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் கொண்டாடும் விழா ஒன்று வேண்டுமல்லவா? நா ஒரு தினத்தை திட்டமிட்டுள்ளோம்.
அனைத்து மக்களுடைய கலாசாரம் பண்பாடு பழக்கவழக்கங்கள் உடை உணவு பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்த விழாவொன்றை நடத்துவற்கு திட்டமிட்டுள்ளோம்.அது நாட்டின் தேசிய விழாவாக இது அமையும்.
வட மாகாணம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது.2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் ஆண்டாக பதிவாகும்.சுற்றுலா பயணிகள் வட மாகாணத்துக்கு வருகை தர வேண்டும்.
அதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம். மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காகும். வட மாகாணத்தில் உள்ள கிராமப்புற விதிகளை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்குவோம்.புதிய திட்டங்களை அமைப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம்.
தற்போது மக்கள் சார்பான அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் சமூகத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்களும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுமே இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள்.
அந்த அரசியல் முறைமை கடந்த இரண்டு பிரதான தேர்தல்களின் போது தோற்கடிக்கப்பட்டது.எமது நாட்டில் எவ்வாறு அரசியல் கலாசாரம் இருந்தது. தாய் பிரதமர்.தந்தை பிரதமர்.மகள் ஜனாதிபதி.சகோதரர் ஜனாதிபதி. அவரது தம்பி ஜனாதிபதி.மாமா ஜனாதிபதி.மருமகன் ஜனாதிபதி.கடந்த ஜனாதிபதி தேர்தலும் அவ்வாறே இருந்தது.எமக்கு எதிராக போட்டியிட்ட மூவரில் ஒருவர் மருமகன்.மற்றையவர் இருவரும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்கள்.ஆனால் என்ன நடந்தது.ஆனால் மக்கள் அந்த அரசியல் கலாசாரத்தை முற்றாக தோல்வியடைய செய்து மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர்.
இனி மக்களுக்கு இனவாதம் தேவையில்லை.எந்தவொரு இனவாதத்துக்கும் இலங்கையில் இதன் பின்னர் சந்தர்ப்பம் இல்லை. அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
இந்த நாட்டில் அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்களுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்.
மக்களின் சொத்துக்களை வீண் விரயம் செய்யாத அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்போம். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.

