அபாயம் மிக்க கொள்கலன் விடுவிப்புக்கு அமைச்சரவையே பொறுப்புகூற வேண்டும் – நளின் பண்டார

83 0

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அச்சுறுத்தல் காரணமாகவே இலங்கை போக்குவரத்துசபையின் தலைவர் பதவி விலகியுள்ளார். இவ்வாறு தற்போதைய அமைச்சர்களுடன் பணியாற்ற முடியாத  நிலையில் ஒவ்வொரு அதிகாரிகளும் பதவி விலகிக் கொண்டிருக்கின்றனர். 

இந்த வகையிலேயே அதிக அபாயம் மிக்க கொள்கலன்களும் அரசாங்கத்தின் அனுமதியுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சுமத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக அபாயம் மிக்க பொருட்களைக் கொண்ட சிவப்பு முத்திரையிடப்பட்ட 300க்கும் மேற்பட்ட  கொள்கலன்கள் எவ்வித சோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன.

ஆளுனர் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டாலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றார். அவ்வாறெனில் யாருடைய அனுமதியில் அவை விடுவிக்கப்பட்டன?

வழமையாக துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களில் 35 சதவீதமானவை மாத்திரமே  பரிசோதிக்கப்படும். கிரீன் செனல் நிறுவனம் உள்ளிட்டவற்றின் கொள்கலன்கள் பரிசோதிக்கப்படுவதில்லை.

ஆனால் இம்முறை அபாயம் மிக்கவை என குறிப்பிடப்பட்டிருந்த கொள்கலன்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் உள்ள சதித்திட்டம் என்ன?

எனவே சுங்க அதிகாரிகளும் அங்குமிங்கும் பந்தினை கைமாற்றிக் கொண்டிருப்பதில் பலன்  இல்லை. இங்கு தவறு அரசாங்கத்தின் மீதே காணப்படுகிறது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உட்பட முழு அமைச்சரவையும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். அதேபோன்று அவற்றில் காணப்பட்ட பொருட்கள் என்ன என்பதையும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இந்த அமைச்சர்களுடன் பணியாற்ற முடியாமல் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிக்  கொண்டிருக்கின்றனர்.

போக்குவரத்துசபை தலைவருக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அச்சுறுத்தல் விடுத்து அவரை பதவி விலகச் செய்ததாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே பாராளுமன்றத்தில் அனைத்துக்கும் எழுந்து விவாதிப்பதைப் போன்று இதற்கான காரணத்தையும் நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.