மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ராணாவை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள காரணங்களில் முகாந்தரம் உள்ளதால், அவரை நாடு கடத்த உயர்நீதிமன்றம் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி, கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர்.மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீஸாரால் உயிரோடு பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தீவிரவாதி தஹவ்வூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் கடந்த 2009இல் பிடிபட்டார். மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து, கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழில் அதிபர் ராணா சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் தஹவ்வூர் ராணா. அமெரிக்க சிறையில் உள்ள ராணாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த ராஜீய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசும் ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க உயர் நீதிமன்றம் இன்று (25) இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

