சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்க​மாட்டேன்!

26 0

சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும்,சீனாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தின் போது சீன மக்கள் குடியரசிடம் உறுதியளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொண்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு தாம் தயாராகவிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீன அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது.

சீன மக்கள் குடியரசின் தலைவர் ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்புக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை  சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், அரச சபை பிரதமர் லீ சியாங், மற்றும் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுத் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது. இதனையடுத்து இரு நாடுகளினதும் உயர்மட்ட பிரநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள இலங்கை – சீன கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

சுமுகமான மற்றும் நட்பு சூழ்நிலையில் இரு தரப்பினருக்கிடையில் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படுத்தல், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு மண்டலம் – ஒரு பாதை திட்டத்தை மேம்படுத்தல்,பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இவ்விஜயத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகள் தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களினதும் வலுவான மூலோபாய வழிகாட்டுதலைப் பேணுவதற்கும், இரு அரசுகள், சட்டமன்ற அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியலில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் ஒருவருக்கொருவர் ஆட்சி மற்றும் அபிவிருத்திக்கான அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வதற்கும்  அவற்றின் மூலம் கற்றுக் கொள்வதற்கும், சீன- இலங்கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

இரு தரப்பினரும் தமது முக்கிய நலன்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளில் தமது பரஸ்பர ஆதரவை  மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் அதிகாரத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சீன அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தாய்வான் சீனப்பிரதேசத்தில் பிரித்தெடுக்க முடியாத பிரதேசம் என்பதையும் அங்கீகரித்து ஒரே சீனா கொள்கைக்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சுயாதீன தாய்வான் எண்ணக்கருவுக்கு இலங்கை எதிர்ப்பு

தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைவதற்கான சீன அரசின் அனைத்து முயற்சிகளையும் இலங்கை உறுதியாக ஆதரிப்பதுடன் ‘சுயாதீன தாய்வான்’  எண்ணக்கருவின் எவ்வித நிலையையும் எதிர்த்து நிற்கிறது. சீன தொடர்பான எந்தவொரு எதிர் மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு  இலங்கை தனது பிரதேசத்தை என்றும் பயன்படுத்த அனுமதிக்காது.

ஷிசாங் மற்றும் ஷின்ஜியாங்தொடர்பான  பிரச்சினைகளில் சீனாவை உறுதியாக ஆதரிக்கும் என்றும் இலங்கை மீண்டும் வலுயுறுத்தியது.தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கையை  தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாகவும், அதன்; தேசிய நிலைவரங்களுக்கு ஏற்ப வளர்ச்சிப் பாதையை சுயாதீனமான தெரிவுகளில் இலங்கைக்கு மதிப்பளித்து, அவற்றுக்கு ஆதரிப்பதாகவும் சீன மீண்டும் உறுதியளித்துள்ளது. சுதந்திரமானதும், அமைதியானதுமானதுமான வெளிவிவகாரக் கொள்கைக்கான அதன் உறுதிப்பாட்டை சீனத் தரப்பு மீண்டும் உறுதியளித்துள்ளது.

ஒரு மண்டலம் -ஒரு பாதை திட்டம்

இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலின் கீழ் சீனாவும் இலங்கையும் ஒரு மண்டலம் – ஒரு பாதை ஒத்துழைப்பில் பலனுறுதிமிக்க பெறுபேறுகளை உருவாக்கியுள்ளன. இலங்கை இதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியிலும், தனது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும்  ஒரு மண்டலம் ஒருபாதை  ஒத்துழைப்பு பங்கு வகிப்பது பாராட்டத்தக்கது. கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கக்கூடிய செயற்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும், பட்டுப்பாதைச் செயற்பாட்டுத் திட்டம் போன்ற தளங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கும், வாழ்வாதாரத்துக்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கமைவாக ஒன்றாகத் திட்டமிடுதல், ஒன்றாகக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றாக பயடைதல், திறந்தும் என்ற வகையில் சீன ஜனாதிபதி முன்வைத்த  எட்டு முக்கிய படிவுகளை பின்பற்றுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கடன் மறுசீரமைப்பு

கடன் பிரச்சினைகளை திறம்பட கையாள்வதற்கு இலங்கைக்கு சீனா ஆதரவாக விளங்கியது. கடன்களை மறுசீரமைப்பதற்கு வழங்கிய முக்கிய உதவி உட்பட நிதிசார் நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற பெறுமதிமிக்க ஆதரவுக்கு இலங்கை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. இலங்கை சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொண்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் சீனா தொடர்ந்து  நேர்மறையான பங்கை பகிப்பதுடன், இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்கவும், கடன் ஸ்திரத்தன்மையை  பேணவும் உதவும் வகையில், ஏனைய கடன் வழங்குநர்களுடன் நட்புரீதியான தொடர்பைப் பேணுகிறது. இலங்கை மத்திய வங்கியும், சீன மக்கள் வங்கியும், தங்கள் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதுடன், நிதிசார் ஒத்துiபை;பைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளன.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்ப ஒத்துழைப்பின் முன்னேற்றத் குறித்து இரு தரப்பினும் அதிருப்தியடைந்துள்ளனர். தேயிலை, இரத்தினக்கல் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சீன இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளிக்க இணங்கப்பட்டுள்ளது.

சீன – இலங்கை சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக் கொண்ட கொள்கைகளுக்கு இணங்க சகலதும் அடங்கிய தொகுப்பொன்றில் விரிவாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியதாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

விவசாயத்துறை மேம்பாடு

விவசாயம் தொடர்பான பரந்த அளவிலான ஒத்துழைப்பு மற்றும் ஆழமான பரிமாற்றங்கள் குறித்து நேர்மறையான மதிப்பீடுகளை இரு தரப்பினரும் பகிர்ந்துக் கொண்டனர். இலங்கையின் நிலையானதும், வளங்குன்றாததுமான விவசாய வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெப்பமண்டல பயிர்களுக்கான உயிரியற் தொழில்நுட்பங்கள், தாவரப் பெருக்கம், பயிர்ச்செய்கை மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடன் பயிற்சி மற்றும் செயற்விளக்க நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகவிருப்பதாக சீன தெரிவித்துள்ளது.

நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை,வெளிப்படைத்தன்மை, மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கடல்சார் ஒத்துழைப்பைத் தொடரவும், கடல்சார் விவகாரங்களில் தொடர்ந்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தவும் இணங்கியுள்ளனர்.கடல்சார் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மற்றும் மறுசீரமைத்தல், கடல்சார் கள விழிப்புணர்வு கடல்சார் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்சார் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராகவுள்ளனர். நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான கடல்சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கல்வித்துறை மேம்பாட்டுக்கு இணக்கம்

கல்வித்துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்த இரு தரப்பினரும் தயாராகவுள்ளனர். புரிதல் மற்றும் நட்பை மேம்படுத்துவதற்கு கல்வித்துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.இலங்கை மாணவர்கள் சீனாவில் உயர்கல்வியை தொடர்வதை சீன வரவேற்று ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு அரசாங்க புலமைப்பரிசல்கள் வழங்குவதற்கு தயாராகவுள்ளது.இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் கல்வித் துறையை மேம்படுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஆசிய முன்முயற்சி மற்றும் ஆசியாவில் கலாச்சார பாரம்பரியத்துக்கான கூட்டணி

ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புக்கான கூட்டணி போன்றவற்றில் பங்கேற்பதற்கான இலங்கையின் நேர்மறையான பதிலை சீனத் தரப்பு பாராட்டியுள்ளது. இக்கூட்டணியின் கீழ் இலங்கையுடன் இருதரப்பு கலாச்சார பாரம்பரிய ஒத்துழைப்பை சீனா மென்மேலும் ஊக்குவிக்கும்.

தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள குற்றங்களை கட்டுப்படுத்தல்

நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் என்பதை இலங்கை- சீன தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளதுடன்,தொலைத் தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள சூதாட்டம் போன்ற குற்றங்களை கூட்டாகக் கட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த அரசமுறை விஜயத்தில் விவசாயம், சுற்றுலா, வாழ்வாதார உதவி, ஊடகம் மற்றும் ஏனைய துறைகளில் இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.