இலங்கையின் வெளிநாட்டு நாணய விநியோக முறிவு நிலை

88 0

சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபிட்ச் ரேட்டிங்ஸ்’ இனால் இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணய விநியோகஸ்த்தரின் முறிவு தொடர்பான தரப்படுத்தலானது ‘பகுதியளவிலான முறிவு’ (RD) எனும் நிலையிலிருந்து ‘முறிவடையக்கூடிய சாத்தியம்’ (CCC+) எனும் நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்தினால் இலங்கையின் உள்நாட்டு நாணய விநியோகஸ்த்தரின் முறிவு தொடர்பான தரப்படுத்தல் ‘முறிவடையக்கூடிய உயர் சாத்தியம்’ (CCC-) எனும் நிலையிலிருந்து ‘முறிவடையக்கூடிய குறைந்த சாத்தியம்’ (CCC+) எனும் நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் சர்வதேச பிணைமுறி உரித்தாளர்களுடனான கடன்மறுசீரமைப்பு பூர்த்திசெய்யப்பட்டதன் ஊடாகவும், பெரும்பாகப்பொருளாதாரக் குறிகாட்டிகளின் சாதக மாற்றத்தின் மூலமும் உள்நாட்டு நாணய கடன்களின் மீள்செலுத்துகை தொடர்பான முறிவு அச்சம் ஓரளவு தணிந்திருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு ஃபிட்ச் ரேட்டிங்ஸின் அறிவிப்பின் பிரகாரம் இலங்கையின் வெளிநாட்டு நாணய கடன் பரிமாற்றம், கடன் சார்ந்த புதிய உத்திகள், வர்த்தக மற்றும் உத்தியோகபூர்வ கடன்மறுசீரமைப்பு, வெளியக நிதி நிலைமையில் அவதானிக்கப்பட்ட முன்னேற்றம், சவால் மிகுந்த நிதியியல் மறுசீரமைப்பு, தேர்தல் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் வலுவான ஆணை, பொருளாதார மீட்சி, கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பணவீக்கம் என்பனவும் இந்தத் தரமுயர்த்தலுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இத்தரமுயர்த்தலானது கடன்மறுசீரமைப்பு முயற்சிகளின் வெற்றியைக் காண்பிப்பதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ‘எமது (கடந்த அரசாங்கத்தின்) கூட்டிணைந்த கடும் முயற்சிகளும், நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டு வளர்ச்சியை நோக்கி நகர்த்திச்செல்வதற்கான அர்ப்பணிப்பும் தற்போது முன்னேற்றகரமான பெறுபேறுகளைத் தர ஆரம்பித்திருக்கிறது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘மிகக்கடினமானதும், சவால் மிகுந்ததுமான பயணத்தை அடுத்து, தற்போது நாம் அனைவரும் காத்திருந்த பெறுபேறு கிட்டியிருக்கிறது. இது கடும் முயற்சி மற்றும் மீண்டெழும் தன்மை ஆகியவற்றின் ஊடாக மாத்திரம் அடையப்பட்டதல்ல. மாறாக பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் எம்மை வழிநடத்திய அசைக்க முடியாத உறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அடையப்பட்டதாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.