இலங்கை சிறார்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் சிலர் வெளியிடுவதாக அமெரிக்க நிறுவனமான “நெக்மேக்” வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட “நெக்மாக்” என்ற இந்த இணையத்தள நிறுவனம் உலகின் எட்டு நாடுகளுடன் இணைந்துள்ளதாக நீதிமன்றத்தின் முன் பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் உறுப்புரிமை பெற்ற நாடுகளில் சிறுவர்கள் தொடர்பான ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்படுவது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடுதலின் போது, இலங்கைச் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கணனி சாதனத்தின் ஊடாக வெளியிடப்பட்டிருப்பதை அந்த நிறுவனத்தின் நெக்மேக் செயலி ஊடாக கண்டறிந்து அது குறித்து இலங்கைக்கு அறிவித்ததாக பணியகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

