அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒருவார காலம் அனுமதி வழங்கி இருப்பதை மறைப்பதற்கா புதையல்தோண்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என்ற சந்தேகம் எழுகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மாவீரர்கள் தினம் என வடக்கு மக்கள் குறிப்பிட்ட ஒரு நாளை அனுஷ்டித்து வருகின்றனர். அந்த நாளில் தங்களின் மரணித்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எந்த தடையும் நாட்டில் இருக்கவில்லை.
எமது அரசாங்க காலத்திலும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விடுதலை புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில், அவர்களின் கொடி, இலச்சினைகளை காட்சிப்படுத்தி அந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்து. குறிப்பிட்ட ஒரு தினத்திலேயே அதனை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்த முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் ஒரு வாரகாலம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதனால் வடக்கில் பல்வேறு இடங்களில் கொடிகளை பரக்கவிட்டு பாரியளவில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் எமது ஆட்சியில் வடக்கு மக்களுக்கு மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒரு தினத்துக்கு அனுமதி வழங்கியபோது அதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு, வடக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது இதற்கு ஒரு வாரகாலம் அனுமதி வழங்கி இருக்கிறது.
அதேநேரம் இந்த ஒருவாரகாலத்தை மறைப்பதற்கா அரசாங்கம் புதையல் தோண்ட ஆரம்பித்திருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன் அரசாங்கம் பல கோடி ரூபாக்களை செலவிட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் வெயங்கொடை பிரதேசத்தில் புதையல் தோண்டி வருகிறது.
ஆனால் அரசாங்கத்துக்கு பாரிய கருங்கல் ஒன்றே தற்போது கிடைத்திருக்கிறது. இலங்கை வரலாற்றில் உத்தியோகபூர்வமாக அரச பாதுகாப்புடன் புதையல் தோண்டிய ஒரே அரசாங்கம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்.
மக்களின் வரி பணத்தை வீணடிப்பத்தில்லை, மக்களின் பணத்தை பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்போது மக்களின் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு புதையல் தோண்டுவதாக தெரிவித்து, பாரிய கருங்கற்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறது.
இதுதான் இந்த அரசாங்கத்தின் நிலைமை. மக்கள் எதிர்பார்த்த எந்த மாற்றத்தை அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றார்.

