“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

400 0

“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம் தொடர்பாக இதுவரையில் போதுமான விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” எனவும் கூறினார்.

“காணாமல் போனோரின் பிரச்சினை இலகுவாகத் தீர்க்கமுடியாத பிரச்சினையாக இருந்து வருகின்றது இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும்” எனவும் அவர் கோரினார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், திருகோணமலை விலா விடுதியில் நேற்று (23) நடைபெற்றது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேரவையின் பிரதித் தலைவர் ரி.வசந்தராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் தொடர்பாகவும் பேரவைக் கூட்டம் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “தமிழ் மக்கள் பேரவை மக்களுடைய இயக்கமாகும். அதனடிப்டையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகின்றது. பல வகைகளிலும் தங்களுடைய பங்களிப்பு பேரவையில் பெருமளவில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கிருக்கின்றது.

ஆகவே, இந்த மக்களை எங்களுடைய பேரவையில் இணைத்து ஒத்துழைக்கும் வகையில் சேவைகளை முன்னெடுப்பது எவ்வாறு என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் நாம் ஆரய்ந்துள்ளோம். மேலும், பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்றும் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம்” என்றார்.

“தங்களின் காணாமல் போன உறவுகளை இராணுவத்தினர் முன்னிலையில் உறவினர்கள் கையளித்திருந்தார்கள். அப்படியிருந்தும்; அவர்களை கையேற்றதாக இராணுவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த நிலையில், போதுமான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அது சம்பந்தமாக போதிய விசாரணைகளை அரசாங்கம் நடத்தியதாக தெரியவில்லை. இதன் காரணமாகவே காணாமல் போனவர்களுக்கான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.