நாம் முன்வைத்த வேலைத்திட்டத்துக்கமையவே அரசாங்கம் வரித் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது

102 0

சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதை விட அரசாங்கம் வருமான வரி மூலம் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது. எனவே வரி செலுத்துவோருக்கு அதன் பயன் சென்றடைய வேண்டும் என நாம் முன்வைத்த வேலைத்திட்டத்துக்கமையவே தற்போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று  சனிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் அண்மித்து வரும் நிலையில் பல பகுதிகளிலும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. வன்முறைகள் இடம்பெறாது என்று அநுரகுமார திஸாநாயக்க கூறினாலும், அவர்களது வழமையான செயற்பாடுகள் இடம்பெறாமல் இல்லை. தோல்வியை அறிந்து கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவது ஒழுக்கமான செயல் அல்ல.

வருமான வரி தொடர்பில் நாம் கடந்த வாரம் தெரிவித்திருந்தோம். வருமான வரி மூலம் அரசாங்கம் 100 மில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்தது. ஆனால் 144 மில்லியன் வருமானம் கிடைத்தது. இவ்வாண்டு 200 மில்லியன் ரூபா கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதன் பலன் வரி செலுத்துபவர்களை சென்றடைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியிருந்தோம்.

அதே போன்று வாகன இறக்குமதிக்கும் இடமளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தோம். நாம் கூறிய விடயங்களுக்கு சமமான வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது வரியைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அவர் நிச்சயம் இந்த தேர்தலில் தோல்வியடைவார். எனவே உங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள் என ஐக்கிய தேசிய கட்சியினரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போதுள்ள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படும் வேலைத்திட்டங்களை அடுத்து தெரிவாகும் அரசாங்கம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப் போவதில்லை. எனவே நாம் தெளிவான வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றோம். அவற்றை நாம் நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.