தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார்!

131 0

தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் எனவே அவரையே தமிழ்மக்கள் தெரிவு செய்யவேண்டும் என வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இச் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி- கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது.

தற்போதுள்ள சனநாயக முறைமை எண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்ற உண்மை பொது அறிவுக்குட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கின்றார்கள்.

ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்.

அதேநேரத்தில் தமிழின அழிப்பில் நீதி கோருவதை மறுப்பதோடல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல்லாடலுக் கூடாகவே கட்டமைக்கின்றார்கள்.

தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது வெவ்வேறு வடிவங்களை/பரிமாணங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன.

சிங்கள மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளார். இம்முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை என்றுள்ளது.