கட்சி, கூட்டணியின் பதவிகளில் இருந்து வேலுகுமார் நீக்கம் – மனோ

159 0

வேலுகுமார்  இன்று செய்துள்ள செயல், மிகப் பெரிய வரலாற்று துரோகம் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. மன்னிக்கக்கூடாது. கண்டி மாவட்ட மக்கள் துணையுடன் இவருக்கு மறக்க முடியாத பாடத்தை நாம் கற்றுத் தருவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி, பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் விதமாக வெளியேற்றப்படுகிறார்.

என் உயிரினும் மேலான கண்டி மாவட்ட மக்களுக்கும் நமது கட்சிக்கும், இவர் செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாததாகும்.

என் தந்தையின் பிறந்த மற்றும் சொந்த ஊர் கண்டி. என் பாடசாலை கல்வியை நான் பெற்றதும் கண்டியில். இந்த கண்டி மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை என்ற வரலாற்று தேவையை நிறைவேற்றவே நான், என் சொந்த உயிரையும் பணயம் வைத்து, கடும் போராட்டத்தின் மத்தியில் 2010ஆம் ஆண்டு தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டேன். அந்த தேர்தலில் நான் தோல்வி அடையவில்லை. ஆனால், இனவாத வன்முறையால் எனது வெற்றி தடுத்து நிறுத்தப்பட்டது.

நான் 2010ஆம் ஆண்டு கண்டியில் போட்டியிட்ட போது எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை கண்டி மாவட்ட தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி கண்டி தமிழ் மக்களின் கண்களை அடுத்து வரும் ஆண்டுகளில் திறந்தது. அதையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் எமது கட்சியின் சார்பில் கண்டியில், வேலுகுமாரை போட்டியிடச் செய்து வெற்றி பெற வைத்தோம்.

இலங்கை அரசியல் கட்சிகளின் வரலாற்றில் நிகழும்  இத்தகைய துரோகங்களில், இது முதலாவதும் அல்ல. கடைசியுமாக இருக்கப்போவதும் இல்லை. ஆனால், இவர் இன்று செய்துள்ள செயல், மிக பெரிய வரலாற்று துரோகம்.

எமது அரசாங்கம் வெல்லும். எமது காலமும் வெல்லும். அரசாங்க பலத்துடன் கண்டியில் நாம் நிச்சயம் களம் இறங்குவோம். அப்போது வரலாறு திரும்பும் என்றார்.