ஜனாதிபதியின் அர்ப்பணிப்பின் பலனாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழும் சுமார் 3 இலட்சம் மக்களின் நீண்டகாலத்தேவையாக இருந்த பாதுகாப்பான குடிநீர் வசதி வெள்ளிக்கிழமை (02) கிடைத்திருப்பதாகவும், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி கூறுவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
வடமாகாணத்தில் பாரிய குடிநீர் திட்டத்தை வெற்றியடையச்செய்வதற்கு உதவிய ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூறவேண்டும். 2015 ஆம் ஆண்டில் அவர் பிரதமராகப் பதவிவகித்தபோது முழுத்திட்டத்தையும் சீரமைத்து, அதற்குத் தேவையான மேலதிக நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பேற்படுத்தினார்.
2017 ஆம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கூடுதல் நிதியுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் திட்டம் மேலும் வலுவடைந்தது. இந்த ஒப்பந்தம் கடல் நீரில் உப்புநீக்கும் நிலையத்தின் செயற்பாட்டை எளிதாக்கிய அதேவேளை, அதன் நிர்மாணம் மற்றும் ஐந்தாண்டு செயற்பாட்டு திட்டம் உட்பட இச்செயற்திட்டத்தின் கூடுதல் செலவுகளை ஈடுகட்டவும் உதவியது.
ஜனாதிபதியின் அர்ப்பணிப்பின் பலனாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழும் சுமார் 3 இலட்சம் மக்களின் நீண்டகாலத்தேவையாக இருந்த பாதுகாப்பான குடிநீர் வசதி இன்று கிடைத்துள்ளது. மேலும், யாழ்ப்பாண நகரில் வாழும் 80,000 மக்களின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், வடமாகாண விவசாயத்துறையும் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

