பல உணவு விடுதிகள் சுற்றி வளைப்பு

191 0

கிழக்கு மாகாணத்தின் பிரபல சுற்றுலா பிரதேசமாக மாறிவரும் காத்தான்குடி நகர சபை பிரிவில் சட்டவிரோதமான முறையில்  பொது வடிகான்களுக்குள் தமது வர்த்தக நிலையங்களின் கழிவுநீரை வெளியேற்றி ஏனைய வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திய வர்த்தக நிலையங்கள் பல இன்று திங்கட்கிழமை (29) காலை சுகாதார அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பிரபல உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள், சிற்றுண்டி சாலைகள் என்பன இச்சுற்றிவளைப்புக்கு உட்பட்டிருந்ததாக சாத்தான்குடி பிரதேச மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.ஏ.எம் பஷீர் தெரிவித்தார்.

தமது வர்த்தக நிலையங்களில் சேரும் பெருமளவிலான கழிவு நீரினை பொது வடிகான்களுக்குள் இடுவதன் ஊடாக ஏனைய வர்த்தகர்களும், பொதுமக்களும் பாதுசாரிகளும் துர்நாற்றம் மற்றும் டெங்கு நுளம்பு தொல்லை உட்பட சுகாதார சீர்காழிகளினாலும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையின் போது பத்துக்கும் மேற்பட்ட பிரபல உணவு விடுதிகள், சிற்றுண்டிசாலைகள் சுற்றி வளைக்கப்பட்டு கழிவு நீர் வடிகால்களுக்குள் வழிந்தோடும்  குழாய்கள் சீமெந்து  கொண்டு நகர சபை ஊழியர்களினால்  அடைக்கப்பட்டு குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.ஏஎம்.பஷீர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நகர சபை அதிகாரிகள் நகர சபையின் ஊழியர்கள் என பலரும் இதில் இணைந்திருந்தனர்.