எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதியமைச்சுக்கு பணத்தை ஒதுக்கும் திறன் உள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப பணத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி, எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால், அந்தப் பணத்தை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
தபால், அச்சிடுதல் மற்றும் பாதுகாப்புக்கான செலவுகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், தேவைக்கு ஏற்ப உரிய பணத்தை விடுவிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலின்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பண ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டன.

