கதிர்காம பாத யாத்திரீகர்களுக்கான மருத்துவ முகாம் : 6000 பக்தர்களின் தாக சாந்திக்காக குளிர்பானம் வழங்கிவைப்பு!

121 0

கதிர்காம பாத யாத்திரீகர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாமில் 4000க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கதிர்காம பாத யாத்திரீகர்களின் நலன் கருதி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனும் தொனிப்பொருளில் உகந்தை மற்றும் குமண போன்ற இடங்களில் கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் 11ஆம் திகதி வியாழக்கிழமை வரையான 11 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இம்மருத்துவ முகாமில் 4000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். அத்தோடு, தங்களுக்கு தேவையான ஆயுர்வேத மருந்துகளையும் பெற்றுச் சென்றனர்.

இதில் உடல் உபாதைகள் மற்றும் வலிகளை  நீக்கக்கூடிய மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், தைலம் போன்றவை வழங்கப்பட்டன.

அத்துடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.எம்.அப்துல் சலாமின் உதவியுடன் சுமார் 6000 பாத யாத்திரீகர்களின் தாக சாந்திக்கான குளிர்பானமும் வழங்கப்பட்டது.

இதில் ஆயுர்வேத வைத்தியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு சிறந்த சேவையினை வழங்கினர். கல்முனை மற்றும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர் என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர், சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உகந்தை காட்டுவழிப் பாதையூடாக இம்முறை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.