யாழில் சீன கடலட்டைப் பண்ணை வந்தது நல்லாட்சியில்; அகற்றப்பட்டது எமது ஆட்சியில் – டக்ளஸ்

124 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தில்தான் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீன கடலட்டைப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது ஆட்சியில் அதை அகற்றினோம் என்றும் கூறினார்.

நேற்று சனிக்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கில் கடல் அட்டைப் பண்ணைகளால் சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடல் அட்டைப் பண்ணைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற நல்லாட்சி அரசாங்கத்தில் அமைத்தார்கள். அப்போது சிறிதரனுக்கு தெரியாதா?

எமது ஆட்சியில் அந்தப் பண்ணையை முற்றாக அகற்றியுள்ள நிலையில் தனது அரசியல் சுயலாபத்துக்காக வடக்கில் சீனர்களின் அட்டைப் பண்ணை இருப்பதாக பொய் கூறி வருகிறார்.

தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தரப் போகிறோம் எனக் கூறி, தமிழ் தலைமைகள் தமது சுயலாப அரசியலையும் உசுப்பேத்தி அரசியலையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பின்னோக்கிப் போவதற்கு தமிழ் தலைமைகளின் பங்கு பிரதானம். அதை வரலாறுகள் உணர்த்தியுள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் மீனவ சமூகங்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கும் தனது வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும் வடக்கில் சீனர்களின் அட்டை பண்ணை இருப்பதாக வெளிநாட்டில் நின்று சிறிதரன் கூறுகிறார்.

அவர் வெளிநாட்டிலிருந்துகொண்டு பொய் கூறுகிற நிலையில் அவருக்கு நான் ஒன்றை கூறுகிறேன். வடக்கில் சீனர்களின் அட்டை பண்ணை இருந்தால், காட்டுங்கள். நான் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார்.