சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

100 0

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அதிபர்களும் ஆசிரியர்களும் இணைந்து இன்று புதன்கிழமை (12) பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பேரணியாக வலயக்கல்வி பணிமனை வரை சென்று, வலயக்கல்வி பணிமனைக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

குறிப்பாக, 1996ஆம் ஆண்டு தொடக்கம் காணப்படும் ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்க வேண்டும்; வறிய மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் கற்றல் உபகரணங்களை அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும்; பாடசாலைகளில் பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவிடுவதை நிறுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘இலவச கல்வியை உறுதி செய்’, ‘ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் மிகுதி மூன்றில் இரண்டு பங்கை கொடு’, ‘கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரி’ போன்ற பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமன்றி, ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.