போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்தியினை அடைய முடியும் எனவும், சுற்றுலாத்துறைசார் விடயங்களை மையப்படுத்தி போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
கடல்வழி போக்குவரத்துத்துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் இன்று (07) நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள், எதிர்கால திட்ட முன்மொழிவுகள், ரயில் போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்துச் செயற்பாடுகள், வடக்கு மாகாண போக்குவரத்துத்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.

தீவுகளுக்கான பயணிகள் போக்குவரத்துக்குரிய படகுச் சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும், இறங்குதுறைகள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது கூறினார்.
பஸ் பயணிகள் நாளாந்தம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு பேசப்பட்டன.
அத்தோடு, ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறியதற்கு அமைய, அதற்கான உரிய செயற்பாடுகளை அமுல்படுத்துமாறு மத்திய அமைச்சின் துறைசார் அதிகாரியால், மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கான சமிக்ஞை கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், யாழ் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையங்களுக்கு அருகில் போக்குவரத்து முனையங்களை நிறுவுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆளுநர் தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.
மேலும் அவர், வடக்கு மாகாணத்திலுள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில் காணப்படும் பொருள் களஞ்சியசாலைகளை உரியவாறு பயன்படுத்த வேண்டும். பயன்பாடு குறைந்த களஞ்சியசாலைகளை தனியாரிடம் வழங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்திகளை அடைய முடியும். சுற்றுலாத்துறைசார் விடயங்களை மையப்படுத்தி போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் போக்குவரத்துத்துறையை விஸ்தரிப்பது பற்றி கேட்டறிந்துகொண்ட மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், கடல்வழி போக்குவரத்தின் அவசியம், தேவை தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்குள் தண்டவாளம் புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

