கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க 5 மில்லியன் கோரும் இராணுவம் – டி.எம்.சுவாமிநாதன்!

353 0

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற பனம்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத் திறப்பு விழாவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேப்பாப்புலவு மக்களுக்குச் சொந்தமான 399 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கு இராணுவத்தினர் 5 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாகக் கோரியுள்ளனர்.

அத்தொகையினை அரசாங்கம் வழங்கி காணிகளை விடுவிக்கவுள்ளதுடன், இந்த மாதம் 24ஆம் நாள் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண இராணுவ அதிகாரிகளுக்கிடையில் மக்களின் காணிகள் விடுவிப்புத் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் காணிகள் எப்போது விடுவிக்கப்பட முடியும் என்பது குறித்த தீர்மானங்களுடன், யாழ்.வலிகாமம் மேற்கு பகுதிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.