நீதி மன்றுக்கு எழுத்து மூலம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாத கரைச்சி பிரதேச சபை

35 0

கிளிநொச்சி நீதவான் நீதி மன்றுக்கு 2020 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையால் சட்டவிரோத கடைகளை அகற்றுவது தொடர்பில் எழுத்து மூலம் வழங்கப்பட்ட உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் உள்ள காணியில் அப்போதிருந்த  மக்கள் பிரதிநிதிகளை கொண்டமைந்த சபையால் அனுமதி வழங்கப்பட்ட சட்டவிரோத கடை கட்டடங்கள் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில்  செயலாளரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், 34688 இலக்கம் கொண்ட  வழக்கானது  தவறான சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுமையாலும்,சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ மன்றுக்கு பாரப்படுத்தாமல் சபையினால் அனுமதியற்ற கட்டங்களை அகற்றமுடியும்.

எனவே குறித்த வழக்கினை மீளப்பெறுகின்றோம் எனத் தெரிவித்து NP/14/42(2)/KPS/SUB/2020 இலக்கம் கொண்ட 2020.10.26 திகதி கடிதம் மூலம் தாங்களே குறித்த சட்டவிரோத கடை கட்டடங்களை அகற்றுவதாக நீதி மன்றுக்கு அறிவித்து  வழக்கினை வாபஸ் பெற்றிருந்தனர்.

இருப்பினும் பெறுமதிக்க குறித்த இடத்தில் அமைக்கப்பட்ட  சட்டவிரோத கட்டடங்க்ள இன்று வரை அகற்றப்படாது காணப்பட்டமை தொடர்பில் கரைச்சி பிரதேச சபையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம். குறித்த சட்டவிரோத கடைகளை தாங்கள் நீதி மன்றுக்கு அறிவித்தன் படி அகற்றினீர்களா? எப்போது? . இல்லை எனில் ஏன் இதுவரை அகற்றவில்லை? அவ்வாறு தாங்கள் இதுவரை அகற்றாது இருப்பின் அது கௌரவ நீதி மன்றத்தை தவறாக வழிநடத்தியதாக தாங்கள் கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் குறித்த கடைகளை அகற்றும் திட்டம் தங்களிடம் உண்டா? தகவல் கோரப்பட்டதற்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையால் 13 ஆம் திகதியில் வழங்கப்பட்ட பதிலின் மூலம் குறித்த சட்டவிரோத கடை கட்டடங்கள் இதுவரை அகற்றப்படவில்லை என்றும், அகற்றுமாறு உரிய தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அகற்றப்படும் எனவும் நான்கு வருடங்க்ள கடந்த நிலையில் பதிலளித்துள்ளனர்.

நீதி மன்றுக்கு வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் குறித்த சட்டவிரோத கடைகளை நான்கு வருடங்களாக அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படு்த்தியுள்ளது.பொதுத் தேவைக்காக ஒதுக்கப்பட்ட பெறுமதிக்க இடங்களை அரசியல் நோக்கங்களுக்கு தனிப்பட்டவர்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் கிளிநொச்சியில்  அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மேற்படி இச் சம்பவமும் மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.