இந்திய தேர்தல்களை பார்வையிட்ட சர்வதேச பிரதிநிதிகள் குழு!

20 0

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் நடைமுறைகளை இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 பேர் கொண்ட சர்வதேச பிரதிநிதிகள் குழுவினர்  பார்வையிட்டனர்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 ஆகிய இரண்டு திகதிகளில் முதல் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது.

மூன்றாவது கட்டத் தேர்தல் மே ஏழாம் திகதியன்று குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும், கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் நடைபெற்றது.

இதன் போது இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 பேர் கொண்ட சர்வதேச பிரதிநிதிகள் குழு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் தேர்தல் நடைமுறைகளை பார்வையிட்டது.

மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மற்றும் ரைசன் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சர்வதேச பிரதிநிதிகள் குழுவினர் பயணித்து, மக்கள் வாக்களிக்கும் முறையை பார்வையிட்டனர்.

முன்னதாக விதிஷா மாவட்டத்திற்கு சர்வதேச பிரதிநிதிகள் குழு வருகை தந்த போது அவர்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு மக்கள் வரிசையாக நின்று வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கினை பதிவு செய்யும் நடைமுறையை பார்வையிட்டனர். அத்துடன் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளையும் கவனித்தனர்.

மூன்றாம் கட்ட தேர்தல் நிறைவடைந்த பிறகு, 64.4% வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும் நான்காம் கட்ட தேர்தல் எதிர் வரும் 13 ஆம் திகதியன்று  10 மாநிலங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட, நடைபெற்று நிறைவடைந்த மூன்று கட்ட தேர்தல்களிலும் வாக்குப்பதிவு குறைவாகவே இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் கவலை அடைந்திருக்கின்றன என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.