போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் எனும் புதிய விண்கலத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் பயணமானது, விண்கலம் ஏவப்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர் ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவின் பச் வில்மோர் (61) மற்றும் சுனி வில்லியம்ஸ் எனும் சுனிதா வில்லியம்ஸ் (58) ஆகியோர் இவ்விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கவிருந்தனர்.
புளோரிடா மாநிலத்தின் கேப் கனாவரால் விண்வெளி ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10.34 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி நேற்று செவ்வாய் (07) காலை 8.04 மணிக்கு) யுனைடெட் லோஞ்ச் அலையன்ஸின் அட்லஸ் 5 என்.22 ரக ரொக்கெட் மூலம் விண்வெளிக்கு ஏவப்படவிருந்தது.
எனினும், விண்வெளி வீரர்களான பச் வில்மோர், சுனி வில்லியம்ஸ் ஆகியோர் விண்கலத்தில் அவர்களின் ஆசனங்களுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில், இப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்டார்லைனர் விண்கலத்தை விண்வெளிக்கு ஏவுவதற்கான அட்லஸ்-5 ரொக்கெட்டின் திரவ ஒட்சிசன் குழாய் வால்வு ஒன்றில் சத்தமொன்று ஏற்படுவதை பொறியியலாளர்கள் அவதானித்ததையடுத்து, இப்பயணத்தை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் தவிர மேற்படி பயணம் இரத்து செய்யப்படும் என ஏற்கெனவே அதிகாரிகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அட்லஸ்-5 ரொக்கெட்டை தயாரித்த யுனைடெட் லோஞ்ச் அலையன்ஸ் (யூ.எல்.ஏ) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொரி புரூனோ, உள்ளூர் நேரப்படி திங்கள் நள்ளிரவு நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில், வால்வு பகுதியில் ஏற்பட்ட தேய்வு காரணமாக மேற்படி அசாதாரண அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறினார். எனினும், விண்கலத்தில் பயணம் செய்யவிருந்தவர்கள் ஒருபோதும் ஆபத்தில் இருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
மேற்படி தேய்வு குறித்து பொறியியலாளர்கள் ஆராய்ந்து, அதே பாகத்தை மீளப் பயன்படுத்துவதா அல்லது புதிய வால்வை பொருத்துவதற்காக ரொக்கெட்டை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்வதா என்பதை தீர்மானிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான மதிப்பீட்டுக்கு மேலதிக நேரம் தேவைப்படும் எனவும், இந்த விண்கலம் மே 10ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் ஏவுவதற்கு திட்டமிடப்பட மாட்டாது எனவும் யூ.எல்.ஏ. நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலோன் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ‘க்ரூ ட்ரகன்’ விண்கலமானது மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏற்றிச் சென்ற முதலாவது தனியார் நிறுவன விண்கலமாக உள்ளது.
ஸ்டார்லைனர் விண்கல சோதனை வெற்றியடைந்தால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதர்கள் பயணிக்கக்கூடிய இரண்டாவது விண்கலமாக அதற்கு நாசா நிறுவனம் சான்றளிக்கும்.
பச் வில்மோர், சுனி வில்லியம்ஸ் இருவரும் அமெரிக்க கடற்படையினால் பயிற்றுவிக்கப்பட்ட விமானிகளாவர். நாசா விண்வெளி வீரர்களான இவர்கள் இருவரும் தலா இரு தடவைகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பியுள்ளனர். ஒரு தடவை நாசாவின் ‘ஷட்டில்’ விண்கலம் மூலமும் மற்றொரு தடவை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலமும் அவர்கள் இப்பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.
ஸ்டார்லைனர் விண்கலம் மூலமான பயணத்தில் அதன் செயற்பாட்டு ஆற்றல்களை இவர்கள் பரிசோதிக்கவுள்ளனர்.
ஏற்கெனவே போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மனிதர்கள் அற்ற முதல் பயணமும் பல வருடகால தாமதத்தின் பின்னரே 2019ஆம் ஆண்டு நிறைவேறியது.
பிரசித்தி பெற்ற விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங், தனது 737 மெக்ஸ் ரக விமானங்களின் கோளாறுகள் தொடர்பாக கடந்த சில வருடங்களாக சர்ச்சைகளை எதிர்கொண்டிருந்தது.
ஸ்டார் லைனர் விண்கலத்தின் மூலம் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டம் வெற்றியடைந்தால் அது போயிங் நிறுவனத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.
மனித விண்வெளிப் பயணங்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்கு 2014ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்துடன் நாசா நிறுவனம் 4.2 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்துகொண்டிருந்தது. அதேவேளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா 2.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்திருந்தது.