எமது வேட்பு மனுவில் டயனா கமகே கைச்சாத்திடவில்லை பெரும் தலைவலியை உயர்நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளது

12 0

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எமது வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.டயனா கமகே கைச்சாத்திடவில்லை.எமது வேட்பு மனு சட்டப்பூர்வமானது என்பதை உயர் நீதிமன்றமும்,தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது.ஆகவே எமது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற  இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்துக்கும்,ஐக்கிய மக்கள் சக்திக்கும் பெரும் தலைவலியாக இருந்த பிரச்சினையை உயர்நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளதற்கு எமது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அரசியலமைப்புக்கு முரணாகவே  பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.

எமது கட்சிக்குப் பிரச்சினையாக இருந்த வெறுக்கத்தக்க இவர்  ஆளும் தரப்பு  பக்கம் சென்று எம்மை கடுமையாக விமர்சித்தார்.இன்று இவரை நீதிமன்றம் வெளியேற்றியுள்ளது.இப்போது இவரது பதவி இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பதிலாக யுத்த தாங்கியொன்று பாராளுமன்றம் வரவுள்ளது. அந்த யுத்த தாங்கிதான் எமது  முஜிபூர் ரஹ்மான். அவர் சிறப்பாகத் தாக்குதல் நடத்தக் கூடியவர். சிறந்த பேச்சாளர். சஜித்தின் வெற்றிக்காக அவரின் வருகை மிகவும் மகிழ்ச்சியானது.

இந்நிலையில் டயனா கமகே எமது  கட்சியில் பதவி வகித்ததாகவும்,இவரின்  பதவி பறிக்கப்பட்டுள்ளதால்  எமது  பாராளுமன்ற உறுப்புரிமைக்கு  பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம்   பதவிகளுக்கும் பிரச்சினைகள் வரும் என்றெல்லாம் தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுத் தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் அதாவது  2020 பெப்ரவரி மாதம் முதல் ஐக்கிய மக்கள் சக்தி செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவே பதவி வகிக்கின்றார்.

அதன்போது நடந்த தற்போதைய பாராளுமன்றத்தின் தேர்தலுக்கான வேட்பு மனுவானது ரஞ்சித் மத்தும பண்டாரவினாலேயே கையெழுத்திடப்பட்டது. அப்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுவை இரத்துச் செய்யுமாறு ரணிலின் ஆலோசனைக்கமைய  உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து, தமது வேட்பு மனுவை சட்டப்பூர்வமானதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் எமது வேட்பு மனு தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், தேர்தல்கள் ஆணைக்குழு வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டது. டயனா கமகேவின் கையெழுத்துடன் நாங்கள்  பாராளுமன்றத்துக்கு  வருகை தரவில்லை என்றார்.