வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக ஊராட்சி செயலாளர், அவரதுமனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர், பாலேகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கலையரசி.இந்நிலையில், பிரபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் வேலூர் லஞ்சஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், 2011 ஏப். 1-ம் தேதி முதல் 2017 மே 31-ம்தேதி வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.20.44 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்தது தெரியவந்தது.
இதையடுத்து, பிரபு, கலையரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் வழக்கு பதிவு செய்தார். மேலும், திருவலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பிரபுவின் வீட்டில் இருந்து வங்கிக் கணக்குபுத்தகங்கள், பல்வேறு சொத்துகள் தொடர்பான ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.