அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன சார்பு போராட்டங்கள் தீவிரம் – 100க்கும் அதிகமான மாணவர்கள் கைது

18 0

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவகளிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்டினின் டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தென்கலிபோர்னியா பல்கலைகழகத்தில் 50க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஆயுதவியாபாரிகளுடனான  தொடர்பை துண்டிக்கவேண்டும் என கோரி நியுயோர்க்கின் கொலம்பியா பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழகத்தை சூழ கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஆரம்பித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் பல்கலைகழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் யுசிபேர்க்லே மற்றும் யுஎஸ்சி பல்கலைகழங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

கலிபோரினா அரச பொலிடெக்னிக் பல்கலைகழகத்தில் தளபாடங்கள் கூடாரங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டதால்  பல்கலைகழகம் மூடப்பட்டது.

பாலஸ்தீன ஆதரவு குழுவை சேர்ந்த மாணவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டமைக்கும் காசா யுத்தத்திற்காக பல்கலைகழகம் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தும்  ஹவார்ட் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாசசூட்ஸ் முதல் கலிபோர்னியா வரை பல பல்கலைகழங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணிகள் மற்றும் பல்கலைகழகங்களை சுற்றி முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.