மேல் மாகாண திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை ஒடுக்க விசேட பொலிஸ் துவிச்சக்கரவண்டி குழு!

15 0

மேல் மாகாணத்தில் இடம்பெறும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆலோசனையில் விசேட பொலிஸ் துவிச்சக்கரவண்டி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் பதிவாகும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகம் இடம்பெறும் இடங்களை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் மே மாதத்திலிருந்து மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளிடக்கிய பகுதிகளில் இடம்பெறும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை ஒழிப்பதற்கான செயற்திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலிருந்தும் நூற்றுக்கு  அறுபது வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மேலும் உத்தரவிட்டுள்ளார்.