மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள் நாடு திரும்பினர்

14 0

மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து இன்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403 என்ற விமானத்தில் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாக “அத தெரண” விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

06 ஆண்களும் இரண்டு பெண்களும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 4ஆம் திகதி மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர்களை விடுவிப்பதற்காக மியன்மார் பாதுகாப்புப் படையினர் செயற்பட்டனர்.

இவர்களை இலங்கைக்கு அனுப்பும் நோக்கில் மியாவாடி மத்திய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 11ஆம் திகதி மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அவர்களை தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

தாய்லாந்திற்கு அனுப்பப்பட்ட 08 இலங்கையர்களும் இன்று இலங்கை வந்துள்ளதாகவும், அவர்களின் வாக்குமூலங்களை பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.