மாவட்ட நீதிபதியின் காதில் அறைந்த சப் இன்ஸ்பெக்டர் கைது

11 0

புத்தாண்டுக்காக காலி லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பத்தேகம மாவட்ட நீதிபதி ஒருவரை கடுமையான வார்த்தைகளால் தூஷித்து அறைந்த குற்றச்சாட்டில் அவரது மைத்துனரான உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பத்தேகம மாவட்ட நீதிபதியின் மனைவியின் சகோதரராவார்.

பத்தேகம மாவட்ட நீதிபதி எல். கே. ஜி விஸ்வநாத் தனது மனைவி மற்றும் செல்லப் பிராணியான பூனையுடன் காலி, லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற மறுநாளான 16 ஆம் திகதி இரவு மாவட்ட நீதிபதி தனது மனைவி மற்றும்  பூனையுடன் தனது வீட்டிற்குச் செல்ல தயாரான போது அவரது பூனை காணாமல் போயுள்ளது.

தனது பூனை காணாமல் போனது தொடர்பில் மாவட்ட  நீதிபதிக்கும் அவரது மைத்துனரான சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சந்தேக நபர் நீதிபதியைத் தூஷித்து அவரது காதில் அறைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட நீதிபதி அக்மீமன பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக்குச் சென்றுள்ளார்.

பொலிஸ் அதிகாரியைக் கண்ட மாவட்ட நீதிபதியின் மனைவி அதிர்ச்சியில் சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து அவர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான சப் இன்ஸ்பெக்டர் அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த செல்லப் பூனை  மாவட்ட நீதிபதியின் காருக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.