உக்ரைனை மறுகட்டமைப்பதற்கு ஏதுவாக 5 பில்லியன் பிராங்க் பங்களிப்பை வழங்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அந்த நாட்டை போர்க்களமாக மாற்றிவிட்டது. உள்கட்டமைப்பு சேதங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, மறுகட்டமைப்பு பணிகளுக்கு பில்லியன் கணக்கான டொலர் தேவைப்படுகின்றன.
இந்த சூழலில், சுவிட்சர்லாந்து உக்ரைனுக்கு உறுதியான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து ஃபெடரல் கவுன்சில், உக்ரைனை மறுகட்டமைப்பதற்காக 5 பில்லியன் பிராங்க் (சுமார் $5.4 பில்லியன் அமெரிக்க டொலர்) வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
முதல் பகுதி உதவி தொகுப்பாக 1.5 பில்லியன் பிராங்க் அடுத்த 4 வருடங்களில் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 3.5 பில்லியன் பிராங்க் உதவி தொகுப்பு 2029 ஆண்டில் இருந்து 2036 ஆண்டுக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 3 பில்லியன் பிராங்க் நிதியுடன் சேர்த்து, உக்ரைனின் மீட்பு பணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
சுவிட்சர்லாந்தின் உறுதிப்பாடு
உக்ரைனின் அத்தியாவசியமான குடிமை உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து ஏற்கனவே தொடங்கியுள்ளது.
இந்த அதிகரித்த நிதி உதவி, உக்ரைனை மீண்டும் கட்டமைப்பதற்கான சுவிட்சர்லாந்தின் நீண்டகால பங்களிப்பையும், உக்ரைனுடனான அதன் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.
உக்ரைனின் மொத்த மறுகட்டமைப்பு செலவு 440 பில்லியன் பிராங்க் என உலக வங்கி மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் பங்களிப்பு மீட்பு பணிகளுக்கு வலுவான ஊக்கமளிக்கும்.