தோல்வி பயத்தால் மோடிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம்: தமிழக பாஜக விமர்சனம்

37 0

தோல்வி பயத்தால் மோடிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதியானது என்பதாலும், மோடிக்கு தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆதரவாலும் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ஏதேதோ பேசுகிறார்.நோட்டாவுடன் போட்டி போடுவதாக பாஜக மீது வசை பாடியிருக்கிறார். 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வென்ற கட்சி பாஜக. 1957-ல் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் திமுக ,இதுவரை ஒரு தேர்தலில்கூட தனித்துப் போட்டியிட்டதில்லை.

தனித்து தேர்தலை சந்திக்க துணிவில்லாத திமுக, பாஜகவை நோக்கி நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என விமர்சிக்கலாமா? 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட திமுக தயாரா? திமுக தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் கூட பெற முடியாது. குறைந்தது 50 சட்டப்பேரவை தொகுதிகளில் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்குகள் வாங்கும்.

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என திரும்ப திரும்ப ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வாஜ்பாய், மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பே காரணம். மோடி ஆட்சியின் அனைத்து திட்டங்களிலும் அதிக பலன் அடைந்த மாநிலம் தமிழகம்தான்.

தலைநகர் சென்னையில் திமுகதான் அதிக முறை வென்றுள்ளது. ஆனால், சென்னையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் எவ்வளவு என்பதை ஸ்டாலின் பட்டியலிட முடியுமா?

பிரதமர் மோடியின் தொடர் வருகையால் இந்த மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக கூட்டணி பெறப்போகும் வெற்றி, திராவிட மாடலை தகர்த்து வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்தை வளர்ச்சி என்ற பாதையில் கொண்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.