தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்: தேசிய மக்கள் சக்தி விசனம்

26 0

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை அறிவிக்க இருப்பதாக கூறுவது வாக்குகளை திசை திருப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் அருன் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“தமிழர் தரப்பு சார்பாக முன்னிறுத்தப்படும் வேட்பாளர் ஒட்டுமொத்த இலங்கை நாட்டு மக்களது 50%இற்கும் அதிக வாக்கினை பெறும் பட்சத்திலேயே அவரால் பதவியினை எட்ட முடியும்.ஆனால் அவ்வாறானதொரு விகிதாசாரத்தினை பெறக்கூடிய தகைமையுடைய ஒருவரை இனங்கண்டுகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.இது முற்றிலும் வாக்குகளை திசை திருப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் ஆகும்.

மேலும் அரசாங்கம் வாங்கிய கடன் தொகையினை மீளச் செலுத்தாததன் காரணமாகவே டொலரின் பெறுமதி குறைவடைகிறது.

இந்த உண்மைத் தன்மையை மறைத்து இந்த அரசாங்கமானது பொய் வேடம் போடுகிறது. இவ்வாறானதோர் அரசினை விரட்டியடித்து புதியதோர் தலைமைத்துத்தின் கீழாக நாட்டினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.