நீர்த்தடாகத்தில் வீழ்ந்து இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு!

24 0

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலங்கடிதுறை, ஆரையம்பதி பகுதியில் சிறுமி ஒருவர் நீர் தடாகத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மாவிலங்கடிதுறையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் திங்கட்கிழமை (08) சகோதரர்களுடன் தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவரது தாயார் வீட்டினுள் சமையல் வேலையிலிருந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் தாயார் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வெளியில் வந்து சிறுமியைத் தேடிய போது சிறுமி காணாமல்போயுள்ளதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் சிறுமியைத் தேடிய போது இந்தச் சிறுமி வீட்டு முற்றத்திலிருந்த நீர் தடாகத்தினுள் வீழ்ந்து கிடந்துள்ள நிலையில், பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டு, ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானின் பணிப்புக்கமைவாக, காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன், ஆரையம்பதி வைத்தியசாலைக்குச் சென்று பிரேதத்தைப் பார்வையிட்ட பின்னர். பிரேதத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (09) உயிரிழந்த சிறுமியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.