அரிசி விலையை குறைக்குமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

10 0

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைிற்கு எதிராகவும் விலை குறைப்பை முன்னெடுக்கக்கோரியும் வவுனியா இராசேந்திரங்குளத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இதன்போது விவசாயிகளுக்கு இலவச திட்டங்களை வழங்கு, பட்டினிச்சாவு எதிர்காலத்தில் வேண்டாம், மூன்று வேளை உணவு எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அடிப்படை உணவு அரிசிச் சோறு ஆகும். அந்த வகையில் தற்காலத்தில் எமது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருட்களின் விலையேற்றமும் கிராம மட்டங்களிலுள்ள வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களிலுள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் பாரிய உணவுப் தட்டுப்பாடு மட்டுமல்லாது போசாக்கு குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பல மக்கள் தங்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர். குறிப்பாக இலங்கையில் கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்டுள்ள அரிசியின் விலையேற்றம் என்பது நாளாந்தம் தினக்கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கும் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களிலும் மூன்று வேளையும் உணவு உண்பதற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு வேளைகளில் மட்டுமே உணவினை பெற்றுக்கொள்ள கூடிய நிலையில் உள்ளனர்.

சில குடும்பங்களில் சோறு இல்லாமல் கஞ்சி காய்ச்சி குடித்துக்கொண்டும் இருக்கின்றனர். பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் இந்த அரிசியின் விலையேற்றம் இன்னும் பட்டினிக்கு தள்ளியுள்ளது.

அத்துடன் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட யுத்தம்,கோவிட் தாக்கம், வெள்ளம், வரட்சி மற்றும் தற்கால பொருளாதார நெருக்கடி அடிநிலையிலுள்ள வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உணவுத்தேவையில் அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளது.

சிறுவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் பெண்கள் அனைவரும் தமது பசியினைப் போக்குவதற்காக போசாக்கற்ற உணவுகளை உண்ண வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையால் நாட்டில் போசாக்கற்ற குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். நோய்த்தாக்கங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் வறுமை காரணமாக சாப்பிடாமல் பாடசாலைகளில் மயங்கி விழுந்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

முதியோர்கள், தொழிலிழந்த ஆண்கள், வறுமைப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் தரப்பினரும் உணவுக்காக வீதிகளில் கையேந்துவதை இலங்கை முழுவதும் காணக்கூடியதாகவுள்ளது.

எனவே இலங்கை அரசு மக்களின் வேண்டுகோளையும் பசியின் கொடூர நிலையையும் கவனத்தில் கொண்டு இலங்கையில் அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழ் உடனடியாக கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். மக்களின் வறுமை நிலை போக்கி மக்கள் மூன்று வேளையும் பசியின்றி சோறு உண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

இலங்கை அரசு மக்களின் சோற்றில் கைவைக்காமல் அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் குறைத்து மக்களின் பட்டினிச் சாவை தவிர்த்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.