சுவிஸ் நாடாளுமன்றம் முன் உயிரிழந்த ஆடுகளின் உடல்களைக் கொண்டு குவித்த விவசாயிகள்

20 0

சுவிஸ் மாகாணமொன்றில், நாடாளுமன்றம் முன், உயிரிழந்த ஆடுகளின் உடல்களைக் கொண்டு வந்து போட்டு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் விவசாயிகள்.

கடந்த சனிக்கிழமை காலை, சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில், Lausanne நகரில் அமைந்துள்ள நாடாளுமன்றம் முன், விவசாயிகள் திரண்டார்கள்.

அவர்கள் உயிரிழந்த 12 ஆடுகளின் உடல்களைக் கொண்டுவந்து நாடாளுமன்றம் முன் போட்டு, கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.

அந்த 12ஆடுகளும், ஒரே நாளில் ஓநாய்களால் கொல்லப்பட்ட ஆடுகள் ஆகும். ஆகவே, ஏராளமாக பெருகியுள்ள ஓநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தக்கோரியே அந்த விவசாயிகள் நாடாளுமன்றம் முன் திரண்டார்கள்.

10 நாட்களுக்கு முன் மேலும் 17 ஆடுகள் ஓநாய்களால் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள அவர்கள், ஓநாய்களின் அட்டூழியத்தைத் தாங்கமுடியவில்லை என்றும், ஓநாய்களைக் கட்டுப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசை வலியுறுத்துவதற்காகவே தாங்கள் இந்த போராட்டத்தில் இறங்கியதாகவும் தெரிவித்தார்கள்.