வவுனியாவில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

27 0

வவுனியா – ஓமந்தை பகுதியில் தொடருந்துடன் பிக்கப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (07.04.2024) இடம்பெற்றுள்ளது.

மன்னார் – நானாட்டன் பகுதியைச் சேர்ந்த ராஜன் நிரோஜன் என்ற 32 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை வவுனியா – யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்துடன் ஓமந்தை – பன்றிகெய்தகுளம் பகுதியில் தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே, அவர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.