யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் படுகாயம்!

13 0

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று (05) பகல் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டையிலிருந்து நவாலியை பகுதியை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

துணவியில் உள்ள குளத்துக்கு அருகிலுள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்ப முற்பட்டபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகிலுள்ள மதிலிலும் பின்னர் மரத்துடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது அதில் பயணித்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் 18 மற்றும் 17 வயதுகளை உடைய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பருத்தித்துறை, நவாலி மற்றும் நாவற்குழி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.