ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பல்வேறு காரணங்களால் விலகிச் சென்ற உறுப்பினர்களில் 90 சதவீதமான உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கட்சியின் உறுப்பினர்கள் உழைக்கும் தொழிலாளருடன் இணைந்து மே தினத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சக்தியை நாட்டிற்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறுகிய அரசியல் மற்றும் அதிகார நோக்கங்களுக்காக உருவாகும் அரசியல் கூட்டணியினால் நாட்டு மக்களுக்கு ஒரு போதும் நன்மையில்லை எனவும் வேகமாக வளர்ச்சியடையும் அரசியல் கூட்டணிகள் விரைவாக வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியானது பலமாக இருந்த போது நாடு அபிவிருத்தியடைந்தாகவும், ஐக்கிய தேசியக்கட்சியானது பலவீனமுற்ற சந்தர்ப்பத்தில் நாடானது வங்குரோத்து நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.